Skip to content

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர்

அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா தேவி(30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கீதா தேவி கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
மேலும் விவாகரத்து கேட்டு அவர் தாக்கல் செய்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சங்கீதா தேவியின் வீட்டிற்கு நேற்று இரவு அவரது கணவர் தனது உறவினர்கள் சிலருடன் வந்துள்ளார். ஆனால் சங்கீதா தேவி வீட்டில் இல்லாததால் அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர்.

அப்போது சங்கீதா தேவி வீட்டிற்கு திரும்பி வந்த நிலையில், தெருவில் வைத்தே அவரது கணவர் சங்கீதாவிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் விவாதம் முற்றியபோது, சங்கீதாவின் கணவர்,தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தனது மனைவியை நோக்கி 3 முறை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சங்கீதா சுயநினைவை இழந்து விழுந்து கிடந்தார். அவரது உடலில் 2 குண்டுகள் பாய்ந்திருந்தன. இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் சங்கீதா தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கீதா தேவியின் கணவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் பீகாருக்கு தப்பியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவரை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!