Skip to content

வாய்ப்பு கிடைத்தால் PM-ஐ மாத்திடுவேன்- நடிகர் கிஷோர்

தமிழில் பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் கிஷோர் தனது தனித்துவமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான அவர்; பிரதமர் மோடி குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கிஷோருக்கு தைரியம் அதிகம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

கன்னட திரையுலகத்தில் அறிமுகமாகி தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் கிஷோர். அவர் அப்படத்தில் ஏற்றிருந்த செல்வம் என்ற கதாபாத்திரம் கோலிவுட்டில் வந்த சிறந்த வில்லன்கள் கதாபாத்திரத்தில் ஒன்று. எதார்த்தம் கலையாமல், வில்லத்தனமும் போகாமல் ஒரு பக்குவமான ரவுடி எப்படி இருப்பாரோ அதேபோன்ற ஒரு பாத்திரத்தை ரசிகர்களுக்கு தனது நடிப்பின் மூலம் கண்ணில் நிறுத்தியிருப்பார்.

சிறந்த நடிகர்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு கிஷோர் பிஸியான நடிகர்களில் ஒருவராக மாறினார். தொடர்ந்து பொல்லாதவன் ஸ்டைல் கேரக்டர்களே வந்துகொண்டிருந்தாலும்; நாசூக்காக அவைகளை தவிர்த்து தனித்துவமான மற்றும் செய்யாத கேரக்டர்களை தேர்ந்தெடுத்தார். அப்படி அவர் நடித்ததில் ஜெயம்கொண்டான், ஆடுகளம் ஆகிய படங்கள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அதேசமயம் குணசித்திர வேடத்திலும் கலக்கினார்.

ஹரிதாஸ்: முக்கியமாக ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் உருவான ஹரிதாஸ் திரைப்படம் அவரது கரியரில் முக்கியமான படங்களில் ஒன்று. ஒருபக்கம் மிடுக்கான காவல் துறை அதிகாரி, இன்னொரு பக்கம் பாசமான அப்பா தனது நடிப்பில் வெரைட்டி காண்பித்திருப்பார். ஆனால் அதற்கு பிறகு அதுமாதிரியான நிறைய கேரக்டர்களில் நடிப்பதில்லை. றெக்க படத்தில் அவர் ஏற்றிருந்த கேரக்டரையும் மிகச்சிறப்பாக டெலிவர் செய்திருந்தார்.

வடசென்னை: அனைத்துக்கும் மணிமகுடமாக வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த வடசென்னை படம் அவருக்கு அமைந்துவிட்டது. பல வேரியஷன்களை தனது நடிப்பில் காட்டும் வாய்ப்பை அந்த கேரக்டர் அவருக்கு ஏற்படுத்திக்கொடுத்தது. செந்திலாக அவர் அமீருக்கு அடங்கிப்போவது, அதே அமீருக்கு ஸ்கெட்ச் போடுவது, துரோகத்தால் சிம்மாசனத்தில் அமர்வது, பிறகு எதற்கும் பயனில்லாமல் உடல்நலம் குன்றி இருப்பது அத்தனை அம்சங்களையும் தன்னுடைய நடிப்பில் காண்பித்திருப்பார்.

கிஷோர் பேட்டி: இப்படி கடந்த பல வருடங்களாக நடித்து வரும் அவர் இப்போது மெல்லிசை படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த சமீபத்திய பேட்டியில், “வாழ்க்கையில் பின்னால் போகும் வாய்ப்பு இருந்தால் 2014ஆம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வு நாட்டில் அதிகம் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்றுவதற்கு பல வருடங்கள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது” என்றார்.

error: Content is protected !!