எனது குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொன்னால், பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று நடிகை லாவண்யா திரிபாதி தெரிவித்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. இவர், தமிழில் ‘பிரம்மன்’ படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து ‘மாயவன்’, ‘தணல்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2023ம் ஆண்டு லாவண்யா திரிபாதிக்கும், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜுக்கும் திருமணம் நடந்தது. கடந்தாண்டு லாவண்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது அவர், தாதினேனி சத்யா இயக்கும், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் வரும் 6ம் தேதி வெளியாக உள்ளது.
இதனிடையே நடிகர் சிரஞ்சீவியின் ராம் சரண்-உப்சனா தம்பதியினருக்கு அண்மையில் ஒரு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒருவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. அதில், ராம் சரண் முதலில் மகளை பெற்றபோது பெரிய கொண்டாட்டம் இல்லை, ஆனால் மகன் பிறந்த பிறகு இப்போது பிரமாண்டமான கொண்டாட்டம் இருப்பதாக டுவிட் செய்திருந்தார். அந்த டுவிட் பதிவுக்கு லாவண்யா ”இந்த டுவிட் மிகவும் மோசமானது, உண்மையிலேயே மகிழ்ச்சியான தருணத்தை விரும்பத்தகாத ஒன்றாக மாற்றுகிறது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று தனது புதிய படமான சதி லீலாவதியின் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று பேசிய லாவண்யா, மீண்டும் இந்த பிரச்னையை எழுப்பினார். ”நான் என் குடும்பத்தை ஆதரித்தேன், யாராவது ஏதாவது தவறாக சொன்னால், அதை நான் பொறுத்து கொள்ள மாட்டேன்” என்று அவர் தெளிவாக கூறினார்.

