பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்ஆகிய முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் இன்று கூட்டாக நிருபர்களை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் போரின் தன்மையே மாறியிருக்கிறது. காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுவே அதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது . பாகிஸ்தானில் இருந்துதான் தாக்குதல் வரும் என முன்பே தெரிந்திருந்தது. இதனால், வான் பாதுகாப்பு அமைப்பு அமைப்பு தயார் நிலையில் இருந்தது. பல அடுக்குகளும், நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை தயாராக வைத்திருந்தோம்
பல அடுக்குகளில் ஒன்றை தாக்கினால், மற்றொரு அடுக்கு எதிரியை வீழ்த்தும். பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு, அனைத்து டிரோன்களையும், ஏவுகணைகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் .
இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அனுப்பிய டிரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. துருக்கி மட்டுமல்ல எந்த நாட்டு டிரோன்களை கொண்டு தாக்கினாலும், இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை முறியடிக்கும். சீனாவின் பிஎல் 15 இ ஏவுகணைகளையும் முறியடித்தோம்.
எங்களுடைய வேலையை சரியாக முடித்து விட்டோம். எத்தனை விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற கேள்விக்கு பாகிஸ்தானுடனான சண்டை பற்றிய முழு விவரங்களையும் கூற முடியாது.
வணிக, போர் விமானங்களை அடையாளம் காணும் உயர் தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது . முப்படைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தது. அதனால், எதிரி விமானங்களால் நம்மை நெருங்க கூட முடியவில்லை. எதிரியை பல 100 கி.மீ. தொலைவிலேயே நிறுத்தி விட்டோம் .
இவ்வாறு அவர்கள் கூறினர்.