2025ம் ஆண்டுக்கான ஐபிஎல்போட்டி கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டி மே 25ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் போர் சூழல் ஏற்பட்டதால், போட்டிகள் சில நாட்கள் தடைபட்டது.
பின்னா் மீண்டும் லீக் போட்டிகள் கடந்த 17ம் தேதி தொடங்கி, நேற்று(27ம் தேதி)டன் லீக் போட்டிகள் நிறைவு பெற்றன.
பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் தலா 19 புள்ளிகள் பெற்றன. ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் முதலிடத்தையும், பெங்களூரு 2ம் இடத்தையும் பெற்றது.
குஜராத்(18), மும்பை(18) அணிகள் 3வது,4வது இடங்களை பெற்றதுடன் மேற்கண்ட 4 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்குள் சென்றன.
இன்று போட்டிகள் கிடையாது. நாளை பிளே ஆப் சுற்றுகள் தொடங்குகிறது. நாளை மாலை முல்லாப்பூரில் இறுதிப்போட்டிக்கான தகுதிச் சுற்று நடக்கிறது. இதில் பஞ்சாப், பெங்களூரு அணிகள் மோதுகிறது. இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
30ம் தேதி இதே மைதானத்தில் எலிமினேட்டர் சுற்று போட்டி நடக்கிறது. இதில் குஜராத், மும்பை அணிகள் மோதும். இதில் தோல்வி பெறும் அணி 4ம் இடத்தை பெற்று போட்டியில் இருந்து வெளியேறும்.
வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டி தகுதிச்சுற்றில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும்., இந்த போட்டி ஜூன் 1ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப்போட்டி தகுதி சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் மோதும்.
இறுதிப்போட்டி வரும் 3ம் தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது. இறுதிப்போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
