தங்களின் 3 அணுசக்தி மையங்களின் தாக்கியதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது இதனால் மத்திய கிழக்கு பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அல்-உதெய்த் தளம். பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள அல்-உதெய்த் தளம், அமெரிகாவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்பட்டு வருகிறது. இதனைல் குறி வைத்து நேற்று இரவு ஈரான் அதிரடி தாக்குதலை நடத்தியது. இது மேற்கு ஆசியாவிலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய கட்டளை தளமாக இருந்து வருகிறது. இங்கு சுமார் 10,000 அமெரிக்க வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இங்கு சுமார் 100 அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் அமெரிக்காவின் மத்திய கமெண்ட் மையமும், கத்தார் ஏர்வேஸ்ஸின் தலைமையகமும் இங்கு தான் அமைந்துள்ளன.
இந்திய நேரப்படி இரவு 7.42 மணிக்கு நேரடியாக ஈரான் தாக்கியது. இந்தத் தளம் மீது மொத்தம் 6 ஏவுகணைகளை வீசியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஏவுகணைகள் வெடிக்கும் சத்தம் கேட்டு தோஹாவின் வணிக வளாகங்களில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். அத்துடன் அமெரிக்க ராணுவ தளம் மீதான தாக்குதல் வெற்றியடைந்ததாக ஈரான் அறிவித்துள்ளது. அதேநேரம் 19 ஏவுகனைகளை இடைமறித்து அழித்ததாக கத்தார் அறிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலால் பெரியளவில் பாதிப்புகள் இல்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா, ஈரான் மீது கடந்த ஞாயிறு அன்று நேரடி தாக்குதல் நடத்தியதுமேலும் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த சம்பத்தால் கோபமடைந்த ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.