கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
காலாண்டு பருவத் தேர்வு விடுமுறை தினம் என்பதால் சிறுவன் ராகுல் தனது நண்பர்கள் இருவருடன் விளையாடச் சென்றுள்ளார் அப்போது அருகிலுள்ள ஆத்தூர், பெரும்பாறை என்ற இடத்தில் பழைய கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
சிறுவன் ராகுல் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராத காரணத்தால், நண்பர்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராகுல் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் உடலை மீட்டனர். சிறுவன் உடலை மீட்டு, கரூர் அடுத்த காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு, வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்