கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிகளின் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், மின்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவினர் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித்சரன், சோனல்.வி.மிஸ்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 2ம்,3ம் தேதி இண்டு நாட்கள் சிபிஐ அலுவலகத்தில் சிபிஐ விசாரணையை கண்காணிப்பு செய்தும், துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு அமைப்புனர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடம் புகார் மனு பெற்று சென்றனர்.
இந்நிலையில், சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவினரிடம் புகார் அளித்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக விசாரணைக்கு ஆஜராகினர்.
இந்நிலையில், துயர சம்பவத்தில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் 5 நபர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என 6 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

