பள்ளி கல்வித்துறை சார்பாக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையொட்டி கரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, மேயர் கவிதா கணேசன், சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ., மற்றும் மருத்துவ கல்லூரி டீன் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி இன்று கரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் திரளாக கூடி நின்று அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
