சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே பையில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைத் திருடிக்கொண்டு கூட்டாளியுடன் தப்பிச் சென்றான்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட விவேகானந்தர் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

