Skip to content

கரூர் – அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியல்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையப்பட்டியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒவ்வொரு ஆண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சம்பா சாகுபடி, கோடை சாகுபடி என இரண்டு போக விளைச்சலுக்கு தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அ.உடையாபட்டி மேற்கு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் பெற்று வந்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி கழுகூர் ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர்.

தற்போது கோடை நெல் சாகுபடி அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் இந்த ஆண்டு கழுகூர் ஊராட்சியில் அமைக்கவில்லை. இதனால் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்காமல் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை தங்களுடைய வீடுகளில் சேமித்து வைத்துள்ளனர். மேலும் கழுகூர் பகுதியில் தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி வேளாண்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும் தெரிகிறது.

ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கவில்லை என்று தெரிகிறது. இதனை அடுத்து கழுகூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கழுகூர் ஊராட்சியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி குளித்தலை மணப்பாறை மெயின் ரோடு அ.உடையாபட்டி பேருந்து நிறுத்தத்தில் டிராக்டரில் நெற்களை கொண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து தகவல் இருந்த தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் வேளாண்மை துறை அலுவலர்களை விரைந்து அழைத்து தமிழ்நாடு அரசு நேரடி கொள்முதல் நிலையம் கழுகூர் ஊராட்சியில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர் அதனை தொடர்ந்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றதால் இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

error: Content is protected !!