அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி. பதவி செல்லாது என அறிவிக்கப்பட்ட வழக்கில் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருக்கிறோம். டில்லியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எங்களுக்கு அழைப்பு வரவில்லை.
கொடநாடு எஸ்டேட் கொலை ,கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. திமுக அரசு பொறுப்பேற்று இரண்டரை வருடம் ஆகியும் இன்னும் குற்றவாளிகளையும், இந்த சம்பவத்தின் சூத்திரதாரிகளையும் கண்டுபிடிக்கவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தமிழ்நாடு காவல்துறையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். இதில் அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.அடுத்த மாநாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. ,பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.