சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். அப்போது பேசிய முதலமைச்சர், பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கோடநாடு சம்பவம் என்ன ஆயிற்று என்று கேள்வி எழுப்பியதோடு, தற்போது நாங்கள் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் என்றும், அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக என குற்றம் சாட்டினார் .மேலும், கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கொடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் காலம் மெத்தனமாக இருந்தீர்கள், நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.
கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்த போது கொரோனா காலகட்டம் அதனால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை என்று எதிர்கட்சி தலைவர் கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி, குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு , அதிமுக ஆட்சியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள், குத்தப்பட்டார்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை தான் இருந்தாக தெரிவித்தார். அதுவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெட்டப்பட்டார்கள், அதை கண்டுபிடித்தார்களா என்று கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அது குறித்து எப்படி பேசலாம் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் , நாங்கள் தீர்ப்பிற்குள், விசாரணைக்குள் செல்லவில்லை, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தான் கேட்கிறோம். குற்றவாளி சாயன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த உடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியிருந்தால் வழக்கு நிலுவையில் இருந்திருக்காது. அம்மையார் வீட்டில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அவர் சாதாரண நபர் கிடையாது முதலமைச்சராக இருந்தவர். மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டுபிடிப்போம் என்றார்.