கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (மதுரை), சூலூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறிய நிலையில், குடிபோதையில் இருந்த சுரேஷின் நண்பர்களான ரகுபதி (24), முத்துக்கிருஷ்ணன் (24), மற்றும் கரண் (23) ஆகியோர் மது பாட்டிலால் சுரேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சுரேஷின் கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், மூவரும் சுரேஷின் உடலை எரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் புதைத்தனர். இன்று பிற்பகல், மதுபோதையில் கொலை செய்ததை உணர்ந்த மூவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்து, நடந்த சம்பவத்தை காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
சூலூர் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை கைப்பற்றினர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்களை பதிவு செய்தனர். குடிபோதையில் நண்பரை சக நண்பர்களே கொலை செய்து புதைத்த இச்சம்பவம், கோவை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.