தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜெகன் தமிழரசன் (32). பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீசாரின் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவர் நேற்று மாலை தஞ்சாவூர் ஞானம் நகர் 4வது குறுக்குத் தெருவில் உள்ள தனது நண்பர் கபில்ராஜ் தங்கியுள்ள வாடகை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கபில்ராஜ் இல்லை. அவருடன் தங்கியுள்ள மற்ற வாலிபர்கள் மட்டும் இருந்துள்ளனர்.
ஞானம் நகர் வீட்டிற்கு அடிக்கடி ஜெகன் தமிழரசன் வந்து செல்வது வழக்கம் என்பதால் அந்த வாலிபர்களுக்கு அறிமுகமானவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன் தமிழரசன், வேலைக்கு புறப்பட்ட அந்த வாலிபர்களில் ஒருவரிடம் தனக்கு டிபன் வாங்கி தந்துவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் டிபன் வாங்கிக் கொண்டு அறைக்கு திரும்பி உள்ளார்.
அப்போது அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் கதவை தட்டிப்பார்த்துள்ளார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையின் உள்ளே மின்விசிறியல் தூக்கு மாட்டிய நிலையில் ஜெகன் தமிழரசன் தொங்கிகொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடன் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகன் தமிழரசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஜெகன் தமிழரசன் தற்கொலை செய்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.