தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் அவர்களின் கீழ் உள்ள மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு தாலுகா தேர்வு செய்யப்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்றையதினம் (28.05.2025) அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை
அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பெற்றுக்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, அரியலூர் வட்டத்திற்குட்பட்ட இராவுத்தன்பட்டி கிராமத்தில் தெரு விளக்குகள் முறையாக செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் (29.05.2025) அரியலூர் வட்டம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, குளோரின் பயன்படுத்தப்படும் முறைகள், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம், குடிநீரின் தரம், நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாட்களின் விவரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவது குறித்து பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கேட்டறிந்தார்.
இந்த ஆய்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.