கரூர் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பெரம்பலூர் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 45 லட்சம் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இரண்டு கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பெரம்பலூர் எம்பி அருண் நேரு ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவிகளின் நலன்களுக்காக மானிய கோரிக்கையில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கு அதிக அளவில் நிதிகளை ஒதுக்கி உள்ளார். பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி நான் முதல்வன் திட்டம், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் ,இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல
எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
படிப்பு ஒன்று தான் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்பதற்காகவே பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கி அனைத்து மாணவர்களும் அப்பா என்று அழைக்கின்ற அளவிற்கு செயல்பட்டு வருகிறார் நம்முடைய முதல்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் கரூர் கலெக்டர் தங்கவேல், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் சூரியனூர் சந்திரன், கதிரவன், கரிகாலன், ராமர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்