மேற்கு ஆசியாவில் மோசமடைந்து வரும் போர் சூழ்நிலையால் எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி. (LPG) விநியோகம் செய்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அமைச்சகங்களுக்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ஈரான் மற்றும் பிற வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா பகுதிகளில் தொடரும் போர், இந்தியாவிற்கான எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தினை வெகுவாக சீர்குலைத்துள்ளதாகவும், மேற்கு ஆசியாவிலிருந்து எல்.பி.ஜி. (LPG) இறக்குமதியை இந்தியா அதிகமாக சார்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கியுள்ளது என்றும் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான எல்.பி.ஜி. (LPG) தேவை மாதத்திற்கு சுமார் 200 டன் என்றளவிலும், வணிக / தொழில் துறைகளின் தேவை மாதத்திற்கு மேலும் 20 டன் என்றளவிலும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர், விநியோக கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு இணைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, தொழில் துறை மற்றும் வணிக நுகர்வோருக்கு எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தை நிறுத்தியுள்ளது குறித்து தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் சிறிய உணவகங்கள் பெரும்பாலும் தங்கள் செயல்பாடுகளுக்கு எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தையே சார்ந்துள்ள நிலையில், எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தின் திடீர் நிறுத்தம் ஓட்டல் துறைக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதுடன், அவற்றில் பல மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் வருத்தத்துடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவில் தொழில்மயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில், பெரிய தொழில்கள் தவிர, அதிக எண்ணிக்கையிலான குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள் உள்ளதாகவும், பெரும்பாலான தொழில் துறை நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்கு எல்.பி.ஜி. (LPG)-யை பயன்படுத்தும் நிலையில், எல்.பி.ஜி. (LPG) விநியோகத்தின் திடீர் நிறுத்தம் அவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும் கவலைபட தெரிவித்துள்ள முதல்-அமைச்சர், இதனால், மேலும் பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்படவேண்டிய சூழலை எதிர்கொள்ள நேரிடுமென்றும், இதனை ஈடுசெய்வதற்கான மாற்று எரிபொருள் மாற்றத்திற்கு அதிக காலமும், கணிசமான செலவும் ஏற்படுமென்று தனது கடிதத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள வீடு, வணிக மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கு தடையற்ற எல்.பி.ஜி. (LPG) விநியோகம் செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடியை கேட்டு கொண்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னெப்போதுமில்லாத இந்த நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்நாடு அரசு துணை நின்று, ஆதரவளிக்கும் என்று தனது கடிதத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார்.

