மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ‘தென்கயிலாயம்’ மற்றும் ‘ஆன்மீக உலகம்’ என்று பக்தர்களால் போற்றப்படும் இந்த மலைக்கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளையும் கடந்து ஏறிச் செல்லும் பக்தர்கள், அங்குள்ள சுயம்பு லிங்கத்தை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். சிவராத்திரி என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக மலைப்பாதையில் அடிப்படை வசதிகளும், பாதுகாப்பிற்காக போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

