கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கி எடுத்தது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. சிங்கப்பூரில் மட்டும் மே மாத தொடக்கத்தில் 14,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின. இதனால் உலக நாடுகள் மத்தியில் மீண்டும் கொரோனா பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சமீபத்தில் பலியானார். இதுவரை தமிழ்நாட்டில் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீண்டும் கொரோனா குறித்து மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ள நிலையில், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தொற்று அதிகரித்து வருவதால், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கூட்டம் கூடும் இடங்களில் மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று அறிகுறி தென்படுவோரிடம் இருந்து பாதுகாப்பான தொலைவில் இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களில் இருமும்போது கைக்குட்டைகளை வைத்து மறைத்து கொண்டு இரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பருவகால காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாதவர்கள் வீடுகளில் இருக்கவும், தமிழக சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.