கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பலமாக பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கே. ஆர்.எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
124.8 அடி உயரமுள்ள கே. ஆர்.எஸ். அணையில் தற்போது 120.8 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கே. ஆர்.எஸ். அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுபோல கபினி அணையில் இன்று காலை நிலவரப்படி 60 அடி தண்ணீர் உள்ளது. இன்னும் 5 அடி தான் நிரம்ப வேண்டி உள்ளது. எனவே கபினியில் இருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணைக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நிர்மட்டம் 112.85 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 7,815 கனஅடி தண்ணீர் தான் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 18,753 கனஅடி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்டது.‘
நாளை அதிக அளவு தண்ணீர் அணைக்கு வரும் என்பதால் மேட்டூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு உள்ளது. இது நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணை நிரம்ப இன்னும் 7 அடி தண்ணீர் தான் தேவை என்பதால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.