Skip to content

ரூ.2 கட்டணத்தில் மினி பஸ் சேவை- கோவையில் தொடக்கம்

தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட மினி பஸ் சேவை துவக்க விழா   இன்று நடந்தது. தஞ்சையில்  இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கியது.

.கோவை மாவட்டத்தில், விரிவாக்கம் செய்யப்பட்ட 22 பழைய வழித்தடம் மற்றும் 8 புதிய வழித் தடம் என மொத்தம் 30 வழித் தடத்தில் மினி பஸ் சேவை துவக்க விழா காந்திபுரம் ஆம்னி பஸ் நிலைய வளாகத்தில் இன்று காலை நடந்தது.
கோவையில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் இச்சேவையை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பின்னர், மினி பஸ்சில் ஏறி, சிறிது தூரம் பயணம் செய்தனர்.

கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குள் 8 மினி பஸ், கோவை வடக்கில் 4 மினி பஸ், கோவை மேற்கில் 15 மினி பஸ், கோவை தெற்கில் 1 மினி பஸ், பொள்ளாச்சியில் 2 மினி பஸ் என மொத்தம் 30 மினி பஸ்கள் இன்று காலை முதல் இயங்க துவங்கின. இந்த பஸ்களில், குறைந்தபட்சம் ரூ.2, அதிகபட்சம் ரூ.10 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மினி பஸ்கள் இன்று முதல் மீண்டும் இயங்க துவங்கி உள்ளதால், கிராமப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது,

”ஏற்கனவே டவுன் பஸ்கள் இயங்கக் கூடிய 65 சதவீதம் இடம், டவுன் பஸ்கள் செல்ல முடியாத பகுதிகள் 35 சதவீதம் இடம் என மொத்தம் 100 சதவீதம் இடங்களிலும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 116 வழித்தடத்தில் மினி பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, நகர்ப்புற பகுதி மக்களை விட, கிராமப்புற பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளது ஆகும். மிக குறுகலான சாலையில் கூட இந்த மினி பஸ்களை இயக்கி, மக்களுக்கு சேவை அளிக்க முடியும்” என்றார்.

error: Content is protected !!