Skip to content

ஆடுதொட்டி இறுதி கட்டப்பணிகள் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை திருவிக.நகர் சட்டமன்ற தொகுதி புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், கட்டப்பட்டுவரும் ஆடுதொட்டி புச்சர் கிரவுண்ட் கட்டுமான பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர், ‘’பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதன்பின்னர் புளியந்தோப்பு திருவேங்கடம் சாமி தெருவில் கட்டப்பட்டுவரும் சென்னை ஆரம்பப் பள்ளி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ‘’வாக்களிக்க தகுதியானவர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுவிடக்கூடாது. வாக்களிக்க தகுதியில்லாத யாரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விடக்கூடாது. இதுதான் திமுக பிஎல்ஏக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதனை ஏற்று திறம்பட செயலாற்றினோம்’’ என்றார். ஆய்வின்போது சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் கவுசிக், திருவிக.நகர் மண்டல அலுவலர் சொக்கலிங்கம், செயற்பொறியாளர் சரவணன் உள்பட பலர் இருந்தனர்.

error: Content is protected !!