ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா தினத்திற்கான கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது. 11 வது யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் 3.2 லட்சத்திற்கும் அதிகமானோர் யோகாவில் பங்கேற்றனர். மேலும் பழங்குடியின மாணவர்கள் 22, 122 மாணவர்கள் 108 சூரிய நமஸ்காரங்களை நிகழ்த்தி கின்னஸ் சாதனையில் இடம் பெற்றனர். இதற்காக கின்னஸ் பிரதிநிதிகள் அதற்கான சான்றிதழ்களை மாநில கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷிடம் வழங்கினர்.
இதுகுறித்து அமைச்சர் லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “யோகா ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடல் வலிமையையும் மன அமைதியையும் தருகிறது. யோகா என்பது இந்தியா உலகிற்கு அளித்த ஒரு சிறந்த பரிசு. இது வெறும் ஆசனங்கள் மட்டுமல்ல. யோகா நமது வாழ்க்கை முறை. இது வாழ்க்கையில் ஒழுக்கத்தை வளர்க்கிறது. 11வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்காக கூட்டணி அரசு யோகாஆந்திராவை மிகுந்த பெருமையுடன் ஏற்பாடு செய்தது. விசாகப்பட்டினத்தில் 3 லட்சம் பேருடனும், மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 2 கோடி பேருடனும் யோகாசனங்கள் சாதனை அளவில் செய்யப்பட்டது. அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி என்பது ஸ்வர்ணந்திராவின் குறிக்கோள். யோகா அனைவரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன், அனைவருக்கும் உலக யோகா தின நல்வாழ்த்துக்கள்” என பதிவு செய்துள்ளார்.