கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக தனது தாயுடன் தான் நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், சந்தேகத்தின் பேரில் மரியாவின் தாயார் க்றிஸ்டோபர் மேரியிடம் விசாரணை செய்துள்ளார். அதில் தனது மருமகளை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டாக வெட்டி, உடல் பாகங்களை ஆற்றில் புதைத்ததை அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
காவல்துறை தகவல்களின்படி, ”கடந்த 5 நாட்களுக்கு முன்பாக கோயிலுக்கு செல்லலாம் என கூறி, மருமகள் நந்தினியை க்றிஸ்டோபர் மேரி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சோழம்பட்டு பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு சென்று, தனது தோழி எமிலியாவுடன் சேர்ந்து நந்தினியை தாக்கி அவரது தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து மருமகளின் உடலை ஒரு இடத்திலும், உடல்பாகங்களை வேறு ஒரு இடத்திலும் புதைத்துவிட்டு, எதுவுமே நடைபெறாதபடி க்றிஸ்டோபர் மேரி வீடு திரும்பியுள்ளார்” என கூறப்படுகிறது. அதுவும் கடந்த 3 மாதங்களாகவே திட்டமிட்டு இந்த கொடூர கொலையை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.
சங்கராபுரம் வளையம்பட்டை சேர்ந்த ஏற்கனவே திருமணமான நந்தினி, விரியூரைச் சேர்ந்த மருத்துவர் ரொசாரியோவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதனை விரும்பாமலேயே, திட்டம்போட்டு தனது தோழியுடன் சேர்ந்து மருமகளை க்றிஸ்டோபர் மேரி கொலை செய்ததாக தகவல்கள் கூறப்படுகிறது. இதையடுத்து நந்தினியின் உடலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் நிபுணர்களுடன் மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

