வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான மோதல் வலுத்துள்ளது.
ரித்திமா பதக் விளக்கம்: வங்கதேச பிரிமியர் லீக் டி20 தொடரில் பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனப் அப்பாசுடன் இணைந்து வர்ணனையாளராகப் பணியாற்றி வந்த ரித்திமா பதக் (35), தொடரிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பிபிஎல் தொடரிலிருந்து நான் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. அந்தத் தொடரிலிருந்து விலகுவது என்பது நானாக எடுத்த தனிப்பட்ட முடிவு. எனக்கு எப்போதும் என் தேசமே முதன்மையானது. எந்த ஒரு பணி நியமனத்தையும் விட கிரிக்கெட் விளையாட்டையும், நாட்டின் நலனையும் நான் உயர்வாக மதிக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றியுள்ளேன்; அது என்றும் மாறாது” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் வரவேற்பு: இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் நாட்டின் நலனுக்காக ரித்திமா பதக் எடுத்துள்ள இந்தத் துணிச்சலான முடிவு இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

