கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர் மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் (32), ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த ராம்குமார் (38), திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வெள்ளைப்பட்டியைச் சேர்ந்த பிச்சைமுத்து (52), கரூர், காந்திகிராமத்தை சேர்ந்த சரவணன் (46), கரூர் மாவட்டம், தலையூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (34) ஆகியோருடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியைச் சேர்ந்த விஜய் (24) என்பவர் திருச்சி அடுத்த ஜீயபுரத்திலிருந்து, கேரளா செல்வதற்காக கனரக வேனில் வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்த போது ஆம்னி காரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆம்னி கார் மற்றும் கனரக வேனில் பயணம் செய்த ஏழு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அனைவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.