தஞ்சாவூர் -ஆலக்குடி ரெயில்வே தண்டவாளத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று தண்டவாளம் அருகே 70 வயது மூதாட்டி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சாவூர் ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, அருணாச்சலம், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், ஏட்டு பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். ஆனால் இறந்து கிடந்த மூதாட்டி யார் ? அவர் எந்த ஊர் ? என்ற விவரம் தெரியவில்லை.
இதையடுத்து மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிபட்டு மூதாட்டி இறந்தாரா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா ? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

