ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வந்தும் பயனளிக்காத நிலையில் தனது சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்ததோடு அவரது ஆதரவாளர்களுடன் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு பெரியகுளத்தில் திமுகவினர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரியகுளம் தென்கரை காந்தி முன்பாக முன்பாக வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தின் போது தனக்கு பின்னாலும் நூறாண்டுகள் அண்ணா திமுக நிலைத்து நிற்கும் என்ற ஜெயலலிதா அம்மாவின் கனவிற்கு இடையூறாக இருந்து ஒற்றை தலைமைக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடுத்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததற்கு நன்றி தெரிவித்து வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடியதோடு தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நூறாண்டு காலம் நிலைத்து நிற்கும் எனவும் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆட்சியைப் பிடிக்கும் எனவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

