திருச்சி பஞ்சப்பூரில் கடந்த 9ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கு பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு ரூ. 236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார்.அதற்கான பூமி பூஜை விழா இன்று பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி வளாகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி செங்கல் எடுத்து வைத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள்,திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே என் நேரு அளித்த பேட்டியில் கூறியதாவது:
புதிதாகத் திறந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஜூன் மாதம்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். காரணம் கடைகள் மற்றும் பணிகள் டெண்டர் வேலைகள் நடப்பதால் அதனை ஜூன் மாதத்தில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்
அரியலூர், பெரம்பலூர் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கும். கரூர் ,தஞ்சாவூர் புதுக்கோட்டை மாவட்ட பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும் .
வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், இயங்கும். அதே போன்று புதிய பேருந்து நிலையமும் இயங்கும்.
புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட இருப்பதால் பேருந்துகள் கட்டணம் உயருமா? என்று கேட்டதற்கு, கட்டண உயர்வு இருக்காது கிலோமீட்டர் மற்றும் ஸ்டேஜ் கணக்கீட்டின் அடிப்படையில் கட்டணங்கள் இருக்கும்.
வீட்டு வரி உயர்வு என்ற வதந்தியை நம்ப வேண்டாம் . ஏற்கனவே இருந்த வீட்டு வரியை மட்டும் தான் வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார்.
