பெங்களூருவில் இருந்து வாரணாசி வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர், விமானியின் அறைக் கதவை திறக்க முயன்றார். இதை கவனித்த விமான பணிப்பெண்கள் உடனடியாக அந்த நபரை தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர் தனக்கு விமான அமைப்புகள் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் தனது பெயர் மணி என்றும், முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கழிவறை என நினைத்து கதவை திறக்க அந்தப் பயணி முயன்றதாக தெரிவித்துள்ளார். அவருடன் சேர்த்து மொத்தம் 8 பேர் குழுவாக வாரணாசிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தரைக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். வாரணாசியில் விமானம் தரையிறங்கியபோது, அங்கு தயாராக இருந்த போலீசாரிடம் மணியை விமான ஊழியர்கள் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.