ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீகாந்த்.
இவரிடம் சென்னை போதைபொருள் தடுப்பு போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தினர். அத்துடன் ஸ்ரீகாந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதை பொருள் உட்கொண்டாரா என்பதை கண்டறியும் சோதனையும் நடத்தினர்.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள ஒரு மது விற்பனை கூடத்தில் நடந்த மோதலில் பிரசாந்த் என்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உயர்ரக போதை பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, நடிகர் ஸ்ரீகாந்த் இடம் இருந்து தான் இந்த போதை பொருளை வாங்கியதாக கூறியிருந்தாராம்.
அதன்பேரில் ஸ்ரீகாந்த்தை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து போதை பொருளை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுடன் நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பில் இருக்கிறாரா என்றும் விசாரணை நடந்து வருகிறது.