கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தங்கவேலு, அவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரம்ம கமலம் செடியை பற்றி கேள்விப்பட்டு, நீண்ட நாட்களாக தேடி அலைந்த அவருக்கு சிறுமுகை லிங்கனூர் பகுதியில் ஒரு வீட்டில் செடி இருந்ததை கண்டு, அவர்களிடம் இருந்து ஒரு கிளையை வாங்கி வந்த தனது வீட்டில் நட்டு வைத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பராமரித்து வந்தனர். நான்கு நாட்களுக்கு முன்பு மொட்டு விட்டு இருந்த நிலையில், நேற்று இரவு பூத்தது பிரம்ம கமலம் பூ. இதனைக் கண்ட அருகில் இருந்த பெண் ஒருவர் பூ பூத்தது குறித்து தெரிவித்து உள்ளார்.
இதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்த அவர்கள் வீட்டில் குடியிருக்கும் அக்கம், பக்கத்தினர் அனைவரையும் வரவழைத்து பூஜை செய்து வழிபட்டனர். இதனால் தங்கள் வீட்டிற்கு பிரம்மனே வந்தது போன்று பிரமிப்புடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளனர்.
பிரம்ம கமலம் என்பது கள்ளிச் செடி வகையைச் சேர்ந்த தாவரமாகக் கருதப்படுகிறது. ஒரே செடியில் 10 க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்கக் கூடிய இவை, 5 முதல் 10 சென்டி மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை.
இந்தப் பூவானது, அதனைச் சுற்றி உள்ள பகுதி முழுவதும் தெய்வீக நறுமணம் கமழ வைக்கும் தன்மை கொண்டது.ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கின்றன. பிரம்ம கமலம் இரவில் பூத்து, காலையில் உதிரும் தாவர வகையாகும்.
பொதுவாக, பிரம்ம கமலம் உயரமான இடங்களில் வளரும் தாவரமாகும். உத்தரகாண்ட் மற்றும் இமயமலைப் பகுதிகளில் அதிகமாக செழித்து வளர்கின்றன.
நேபாளம், பூடான் போன்ற பகுதிகளிலும் காணப்படுகிறது. இவை, பெரும்பாலும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக பூக்கிறது.
பிரம்ம கமலம் அழகான மலராக மட்டுமில்லாமல், ஆன்மிகம் மற்றும் தூய்மையின் சின்னமாகவும் கருதப்படுகிறது. பிரம்மனின் நாடிக்கொடி எனவும் இது வர்ணிக்கப்படுகிறது.
இந்து மற்றும் புத்த மதங்களில் புனித மலராகவும், மங்களகரமானதாகவும் பார்க்கப்படுகிறது.
பிரம்மகமலம் என்பது பிரபஞ்சத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. பிரம்ம கமலம் மலருவதை பார்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருகிறது என நம்பப்படுகிறது. மேலும், பிரம்ம கமல மலர்கள் மலரும் போது, ஒருவர் மனதில் தன் விருப்பத்தை நினைத்து பிராத்தனை செய்தால், அந்த விருப்பம் நிறைவேறும் எனவும் நம்பப்படுகிறது.
இது மன அமைதியைக் கொண்டு வருவதாகவும், மனதையும், ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் சக்தியை கொண்டு உள்ளதாகவும், சொல்கிறார்கள்.
இமயமலைப் பகுதிகளில் வசிக்கும் சில மலைக் கிராம மக்கள், இந்த பிரம்ம கமலம் பூக்கும் போது அதனைக் கொண்டாடும் விதமாக அவர்கள் நடனமாடி, பாடி ரசிப்பார்களாம். திருவிழாக்களின் போது மலைக் கோயில்களில் பிரசாதமாகவும் இது பயன்படுத்தப்படுகிறதாம்.