தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், குரும்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று புதுகை கலெக்டர் அருணா திடீர் ஆய்வு நடத்தினார். அங்கு பயிலும் மாணாக்கர்களின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு நடத்தினார். அவா் மாணவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார்.
அதைத்தொடர்ந்து குரும்பூர் அங்கன்வாடி மையத்திலும் கலெக்டர் ஆய்வு நடத்தினார். மையத்தின் செயல்பாடுகள் குறித்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டார். அங்குள்ள ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர் உணவு பொருட்களின் தரம், இருப்புகளை சரிபார்த்தார். பின்னர் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு இல்லம் புதிதாக கட்டப்படுவதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் .ச.சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ,.அ.ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.