புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (செவ்வாய்) காலை 10 மணிக்கு மருத்துவ கல்லூரி கலையரங்கில் நடக்கிறது. இதற்காக அரசு சார்பில் விழா அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில், விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊள்ளூர் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர புதுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ. முத்துராஜா மற்றும் எம்.பிக்கள் அப்துல்லா, துரை வைகோ மற்றும் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத் அலி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் பெயர் அந்த அழைப்பிதழில் இடம் பெறவில்லை.
விராலிமலை எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர்(அதிமுக), கந்தர்வகோட்டை மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. சின்னதுரை, அறந்தாங்கி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், ஆகிய 3 பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன.
அரசு சார்பில் நடத்தப்படும் விழாவில் 3 எம்.எல்.ஏக்களின் பெயர் மட்டும் ஏன் விடுபட்டது கவனக்குறைவா, அல்லது வேண்டும் என்றே விடப்பட்டதா என்பது குறித்து புதுக்கோட்டை அரசியல் கட்சிகள் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் விழா நடப்பதால் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. பெயர் போடப்பட்டுள்ளது. மற்ற இருவரும் அமைச்சர்கள் என்பதால் பெயர் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இதுவரை அரசு விழாக்களில் இப்படி நடக்கவில்லையே என அந்த எம்.எல்.ஏக்கள் தரப்பில் கேள்ளி எழுப்பபட்டுள்ளது.