Skip to content

புதுவை இடைக்கால பட்ஜெட் தாக்கல்…… திமுக வெளிநடப்பு

  • by Authour

 புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட்  தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய புதுவை சட்டப்பேரவை இன்று காலை 9.45 மணிக்கு கூடியது.

தொடர்ந்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத செலவினங்களுக்கு ரூ. 4634 கோடியே 29 லட்சத்து 89 ஆயிரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுந்து பேசும்போது, “மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டார்கள். முழு பட்ஜெட்டை முயற்சி எடுத்திருந்தால் போட்டிருக்கலாம். ஆளுநர் பிரச்சினையால் அனுப்பவில்லையா.  வாய்ப்பு கிடைத்திருந்தாலும் அலட்சியமாக கோஷ்டி பூசலால் தவற விட்டுள்ளீர்கள். புதுச்சேரிக்கு பிரச்சினை அதிகமாக இருக்கிறது. 3 நாட்களாவது கூட்டத்தை நடத்தலாம். கலந்து பேசினால் அதிகாரிகளுக்கு தெரியும். அடுத்து ஆறு மாதங்கள் கழித்துதான் கூட்டத்தை நடத்துவீர்கள். அதனால் வெளிநடப்பு செய்கிறேன்” என்றார்.

இந்நிலையில் தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அறிக்கைகளை வாசித்தார். அதையடுத்து எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!