Skip to content

23ம் தேதி இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா… 5 அமைச்சர்கள் பங்கேற்பு… விழா ஏற்பாடு தீவிரம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னர் இராசேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கையிலிருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு குடமுழுக்கு நடத்திய பெருமை வாய்ந்த கலைக்கோவிலாகும்.

சோழ மாமன்னர் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரை நாளை தமிழக அரசு 2023ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடிவருகிறது. மேலும் கடந்தாண்டு முதல் இவ்விழா நாள் அன்று தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளையும், இராஜேந்திர சோழன் நினைவை போற்றும் வகையில் அறிஞர்களின் சொற்பொழிவையும் நடத்தி வருகிறது. இராஜேந்திர சோழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசு 21 கோடி ரூபாய் மதிப்பில் கங்கை கொண்ட சோழபுரம் அருகே அருங்காட்சியகம் அமைக்க கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்புமிக்க விழா இவ்வாண்டு 23ஆம் தேதி மாநில அரசு சார்பில் கோவில் எதிரே கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இராஜேந்திர சோழனின் பிறந்த நாளான 23ஆம் தேதி காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.

சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் பங்கேற்ற சிறப்பிக்கின்றனர். சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் கலை பண்பாட்டு துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் – நிர்வாகத் திறனை! போர் வெற்றிகளை ! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் இராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்துகின்றனர். மாநில அரசு சார்பில் நடத்தப்படும் இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

விழாக்கென ஏற்பாடுகளை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழாவில் பெருமளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால் அடிப்படை தேவைகள் பாதுகாப்பு வசதிகள் குடிநீர் வசதி வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர் தேவையான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார். ஆய்வில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!