சென்னை ராமபுரத்தில் மறைந்த திரைக்கலைஞர் ராஜேஷ் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார், இயக்குனர் பேரரசு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி,உயர் நீதி மன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ராஜேஷ் எனக்கு மட்டுமல்ல நிறைய பேருக்கு நெருங்கிய நண்பர். அவர் மிகப்பெரிய நடிகரோ, இயக்குனரோ, அரசியல்வாதியோ கிடையாது. இருந்தாலும் தமிழக முதலமைச்சர், இளையராஜா உள்ளிட்ட எல்லா பிரபலங்களும் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்றால், அவர் எப்படி வாழ்ந்தார் என்பதற்குச் சான்று. ஆடுதொடாத இலையைப் போன்று அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது.
சினிமா, அரசியல், ஆன்மீகம் என எல்லாமும் அவருக்கு தெரியும். அவ்வளவு தேடுதல் எண்ணம் கொண்டவர். அவருக்கு தெரிந்தது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று பாடுபடுவார். என்னை அடிக்கடி சந்திக்கும்போது ரொம்ப நாள் ஆரோக்கியமாக இருக்க, என்னென்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார். அவர் திடீரென்று இல்லாமல் போனது அதிர்ச்சி. அவரது இழப்பு பேரிழப்பு” என்றார்.