18 ஆண்டு காத்திருப்புக்கு பின் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றுள்ளது. அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக பெங்களூர் அணி கோப்பையை வென்றது. அந்த அணி வெற்றி பெற்றதில் இருந்து ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் பட்டாசுகளை வெடித்து வெறித்தனமாக கொண்டாடினர். தொடர்ந்து நேற்று பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதேபோல் பேரணிக்கும் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரணி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாராட்டு விழாவுக்காக பெங்களூர் அணியினர் பெங்களூர் விமான நிலையம் வந்தனர். அப்போது விமான நிலையத்தில் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் உற்சாகத்துடன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். இதன் பின்னர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்து வீரர்கள் வருகை தந்தனர். ஏற்கனவே அங்கு வீரர்களை வரவேற்க தயாராக இருந்த ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 11 போ் பலியானார்கள். இதில் ஒரு குழந்தை, ஒரு மாணவி அடக்கம். மேலும் 30 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. விழாவுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் , பாதுகாப்பு பணியில் காட்டப்பட்ட அலட்சியமே விபத்துக்கு காரணம் என அனைவரும் குற்றம் சாட்டுகிறார்கள்.