ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டம் முல்லான்பூரில் நேற்று நடந்தது. பஞ்சாப் கிங்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் நூவன் துஷாரா நீக்கப்பட்டு ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. மார்கோ யான்சனுக்கு பதிலாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சேர்க்கப்பட்டிருந்தார்.
பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் யாஷ் தயாள் பந்தை, கவர் திசையில் அடிக்க க்ருணால் பாண்டியாவிடம் எளிதாக கேட்ச் ஆனது. மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 18 ரன்கள் சேர்த்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தை விளாச முயன்ற போது விக்கெட் கீப்பரிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தை அடிக்க முயன்ற போது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஜோஷ் இங்லிஷ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தை டீப் ஃபைன் லெக் திசையில் விளாசிய போது புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதேரா 8 ரன்களில் யாஷ் தயாள் பந்தில் ஸ்டெம்புகள் சிதற நடையை கட்டினார்.
இதன் பின்னர் சஷாங் சிங் 3 ரன்களில் சுயாஷ் சர்மா பந்தில் போல்டானார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 17 பந்துகளில், 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் விளாசிய நிலையில் சுயாஷ் சர்மா பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அறிமுக வீரராக களமிறங்கிய முஷிர் கானை ரன் ஏதும் எடுக்காத நிலையில் எல்பிடபிள்யூ முறையில் பெவிலியனுக்கு திருப்பினார் சுயாஷ் சர்மா.
இதைத் தொடர்ந்து ஹர்பிரீத் பிரார் 4 ரன்களில் ரோமாரியோ ஷெப்பர்டு பந்தில் போல்டானார். மட்டையை சுழற்ற முயன்ற அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 12 பந்துகளில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வீரராக ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் விக்கெட்கீப்பரிடம் பிடிகொடுத்து வெளியேற பஞ்சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆர்சிபி அணி தரப்பில் சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், யாஷ் தயாள் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், ரோமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
102 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பில் சால்ட் 27 பந்துகளில், 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 8 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்களும் சேர்த்தார்.
முன்னதாக விராட் கோலி 12 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்திலும், மயங்க் அகர்வால் 13 பந்துகளில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் முஷிர் கான் பந்திலும் ஆட்டமிழந்தனர்.
8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி 2016-ம் ஆண்டுக்கு பின்னர் தற்போதுதான் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது.இதுவரை ஆர்சிபி 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்றபோதிலும், இறுதிப்போட்டியில் வென்றதில்லை என்ற குறை உள்ளது. இந்த வருடம் அந்த குறை தீரும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
இன்று மாலை அதே முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை, குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, பஞ்சாபுடன் 1ம் தேதி அகமதாபாத்தில் மோதும். அந்த போட்டியில் வெல்லும் அணி 3ம் தேதி இறுதிப்போட்டியில் ஆர்சிபியுடன் மோதும்.