சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளைப் பேசியபடி, ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்ததோடு, தங்களை வேடிக்கை பார்ப்பவர்களை வேண்டுமென்றே விபத்தில் சிக்க வைத்த சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் இருவரும் உண்மையிலேயே சண்டையிடுவதாக நினைத்து, அவர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர், சாலையின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தை கவனிக்காமல் அதன் பின்பக்கமாக மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதை பார்த்து சிரித்தவாறு கேலியும், கிண்டலும் செய்த இளைஞர்கள், அந்தக் காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ததுடன் மட்டுமின்றி, தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
ரீல்ஸ் மோகத்தில் வேண்டுமென்றே இது போன்ற விபரீதமான விளையாட்டுகளில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்துவதுடன், பொது மக்களை அச்சுறுத்தும் இதுபோன்ற கொடூர க் குணம் கொண்ட இளைஞர்கள் மீதுபோலீசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

