காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த 9 ம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் தாய் காஜல் குமாரி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக 12 ம் தேதி வழக்கு பதியப்பட்டு, சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் தலையில் காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.
சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக முதலில் கருதப்பட்டது. இருப்பினும் விசாரணையை முடுக்கிய போலீஸார், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில், அசாம்மைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவனை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் சிறுவன் ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் போலீசாரிடம் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார் . அதன் பேரில் அசாமைச் சேர்ந்த போல் தேவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.