Skip to content

மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிகளில் தளர்வு– இல்லதரசிகள் ஹேப்பி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான நிபந்தனைகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது.  கார் வைத்திருப்போர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்ப பெண்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 1.15 கோடி பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று வருகின்றனர்.   இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில்,  புதிதாக  பயனாளிகளாக இணைய பல்வேறு நிபந்தனைகள் இருந்து வருகிறது. இதனால் இந்த நிபந்தனைகளை தளர்த்த வேண்டும், அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என பலரும் கோரிகை விடுத்து வந்தனர்.

இதனிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்கள், அடுத்த மாதம் 15ம் தேதி சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான நிபந்தனைகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது.

அதன்படி,  “பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்” என்று  அரசு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!