மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் லுத்தரன் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் சமூக நீதி உரிமை கோரும் 23-வது மாநில மாநாடு நடைபெற்றது. லுத்தரன் முன்னேற்ற பேரியக்க தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாநாட்டில் பொதுச்செயலாளர் இ.டி.சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட பட்டியல் இனத்திலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து உள்ஒதுக்கீடாக 4.6 சதவீதம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும் என்ற நீண்ட கால போராட்டத்திற்கும் உச்ச நீதிமன்ற வழக்கிற்கும் முழு ஆதரவை தெரிவிக்கிறோம்.
1706-ம் ஆண்டு தரங்கம்பாடியில் தரையிறங்கி தமிழில் அச்சு கூடத்தை நிறுவி பெண் கல்விக்கூடம் திறந்து, சமூக, சமுதாய, தமிழ் தொண்டாற்றிய சீகன்பால்கு-வுக்கு மணிமண்டபம் கட்ட ஆணையிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
