கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் நாகேஸ்வர் ராவ்(65). இவரது மனைவி சந்தியா ஸ்ரீ. இந்த தம்பதியின் ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
இதனிடையே நாகேஸ்வர் ராவ் சமீப காலமாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாகேஸ்வர் ராவ், தனது மனைவி சந்தியா ஸ்ரீயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கூறியுள்ளார்.
அவர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நாகேஸ்வர் ராவ் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நாகேஸ்வர் ராவ் திட்டமிட்டிருந்ததாக போலீசாரிடம் நாகேஸ்வர் ராவ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகேஸ்வர் ராவ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து அமெரிக்காவில் உள்ள அவரது மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

