இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி(66). இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மும்பை மற்றும் டில்லியில், அனில் அம்பானிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் நேரில் ஆஜராகியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக, அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையை துவக்கினர். மும்பை, டில்லி உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி.. அனில் அம்பானி இடங்களில் சிபிஐ சோதனை
- by Authour
