தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல் மற்றும் இரும்புதலை பகுதிகளில் இன்று நடைபெற்ற வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.3.89 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் உடனடியாக மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட அளவிலான குறைதீர்க்கும் குழுவிடம் முறையிட்டு இந்தப் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் தொகுதிக்கு தலா 9 குழுக்கள் வீதம் மொத்தம் 72 பறக்கும் படை குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர். இதேபோல 72 நிலையான கண்காணிப்பு குழுக்களும் முக்கிய சாலைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் பொது இடங்களில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணம் கொண்டு செல்லும்போது, அதற்கான உரிய ஆவணங்களை (வங்கி ரசீது அல்லது தொழில்முறை ஆவணங்கள்) உடன் வைத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

