தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், குடிநீர் கேன்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாநில உணவு பாதுகாப்புத் துறை கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. 20 லிட்டர் குடிநீர் கேன்களில் பாசி பிடித்தல், அசுத்தம், தரமற்ற நிலை போன்றவை கண்டறியப்பட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, உணவு பாதுகாப்புத் துறை, குடிநீர் வழங்கல் துறை ஆகியவை இணைந்து சிறப்பு ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளன. ஒவ்வொரு கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, FSSAI உரிம எண் ஆகியவை தெளிவாக இடaம்பெற்றிருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.பாசி பிடித்த கேன்கள், அசுத்தமான கேன்கள், மறுசுழற்சி வரம்பை மீறிய கேன்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது உடனடி அபராதம் விதிக்கப்படும்.
ஒரு குடிநீர் கேனை அதிகபட்சமாக 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது என்ற விதி மீறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.குடிநீர் கேன்களை நேரடியாக சூரிய ஒளியில் தேக்கி வைக்கக் கூடாது என்றும், கால்சியம் (10 – 75 மி.கி/லிட்டர்), மெக்னீசியம் (5 – 30 மி.கி/லிட்டர்) போன்ற தாதுக்கள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்றும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறையான அனுமதி, தரச் சான்றிதழ் இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கோடை காலத்தில் குடிநீர் தரத்தில் ஏற்படும் குறைபாடுகள் மக்களின் உடல்நலத்தை பாதிக்கும் என்பதால், இந்த நடவடிக்கை மிகவும் தேவையானதாக கருதப்படுகிறது.

