Skip to content

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

 இந்திய கிரிக்கெட் அணி  5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது.   முதலில் ஆடிய இந்தியா, முதல் இன்னிங்சில் 587 ரன் குவித்தது. அதற்கு பதிலடியாக இங்கிலாந்து அணி 407 ரன் எடுத்தது. இதையடுத்து, 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா, 6 விக்கெட்டுக்கு 427 ரன்னுடன் டிக்ளேர் செய்தது.

அதனால், 608 ரன் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. முதல் இன்னிங்சில் சதம் விளாசிய ஜேமி ஸ்மித் மட்டும் சிறப்பாக ஆடி 88 ரன் எடுத்து அவுட்டானார். 68.1 ஓவரில் இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

அதனால் இந்தியா 58 ஆண்டுகளில் முதல் முறையாக, பர்மிங்காம் நகரில் இங்கிலாந்து அணியை 336 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இந்திய தரப்பில் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

1000 ரன் குவித்த அபூர்வ இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி, முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. 2வது இன்னிங்சில் 427 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம், 2 இன்னிங்சிலும் சேர்த்து, இந்தியா 1014 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன், 2004ல், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2 இன்னிங்சிலும் சேர்த்து 916 ரன் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. உலகளவில், 1000 ரன்களுக்கு மேல் அதிகபட்ச ரன் குவித்த அணிகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம், 1000 ரன்னுக்கு மேல் குவித்த 6வது அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இங்கிலாந்துடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் சுப்மன் கில் 269, 2வது இன்னிங்சில் 161 ரன் எடுத்தார். முதல் போட்டியில் அவர் எடுத்த 155 ரன்களுடன் சேர்த்து, அவரது ஒட்டுமொத்த ஸ்கோர், 585. இதன் மூலம், இரு டெஸ்ட்களில் 2வது அதிக ரன் குவித்த சாதனையாளராக கில் திகழ்கிறார்.

  •  கேப்டனாக முதல் இரு டெஸ்ட்களில் அதிக ரன் குவித்த வீரராக திகழ்ந்த விராட் கோலியின் (449 ரன்) சாதனையை கில் முறியடித்துள்ளார்.
  •  இங்கிலாந்துடனான 2வது டெஸ்ட் போட்டியில் கில் குவித்த 430 ரன்கள், 2வது அதிகபட்ச ரன்.
  •  இரு இன்னிங்ஸ்களிலும் 150க்கு மேல் ரன் குவித்த 2வது வீரர் சுப்மன் கில்.
  •  ஒரு போட்டியில் இரட்டை சதம் மற்றும் ஒற்றை சதம் விளாசிய 9வது வீரர் கில்,

நேற்றைய போட்டியில் இந்திய கேப்டன்  சுப்மன் கில்  பிளேயர் ஆப் த மேட்ச்  விருது பெற்றார்.  இந்த வெற்றியின் மூலம் இந்தியா, இங்கிலாந்து தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளது. அடுத்த போட்டி வரும் 10ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது-

error: Content is protected !!