திருச்சி மாவட்டம் வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, அப்குதியை சேர்ந்த கணேசன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், தீக்குளிப்பதாக பெட்ரோல் கேனுடன் வந்திருந்தார். இதையறிந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து, அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கணேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,…
வேங்கூர் பகுதியில் உள்ள பெரியார் காலனி மற்றும் காமராஜர் காலனி வி.எஸ். நகர் பகுதியில் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அடியில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் என்ற பெயரில் மலம், சிறுநீர் கலந்த நீரை குடித்து வருகிறோம். இதுகுறித்து சம்மந்தப்பட்ட பி.டி.ஓ., மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

